ஃபாஸ்ட் ஃபுட் ஆரோக்கியத்தின் எதிரி… இது தெரிந்திருந்தாலும் குழந்தைகளின் அடம் பெற்றோரைப் பணிய வைக்கிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
இன்றைய பெற்றோர் குழந்தைகளை ஜீனியஸ் ஆக்க அதிகம் மெனக்கெடுகிறார்கள். அதே நேரத்தில், உணவு விஷயத்தில் கவனம் செலுத்துவதில்லை. குழந்தைகளை ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிட அனுமதிக்கிறார்கள். அதனால் குழந்தைகள் வகுப்பறையில் கவனச் சிதறலுக்கு ஆளாகிறார்கள். பாடங்களை முழுமையாகப் புரிந்துகொள்ள அவர்களால் முடிவதில்லை. வீட்டுப் பாடம் எழுத ஆர்வம் இல்லாமல் தவிர்க்கிறார்கள். இந்தப் பிரசனை சம்பந்தப்பட்ட குழந்தையை ‘முட்டாள்’ என அடையாளப்படுத்துகிறது.
அதிக அளவு ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடும் குழந்தைகள் சோம்பலையே வெளிப்படுத்துகிறார்கள். யோசிக்கவே சிரமப்படுகிறார்கள். நேர்மறை சிந்தனைகள் குறைகின்றன. உளவியல் சிக்கல்கள் மனதில் மையம் கொள்கின்றன. பாக்கெட் சிப்ஸுகளில் சோடியமும் பொட்டாசியமும் அதிக அளவு உள்ளன. இவை உடலில் அதிகமாகத் தேங்கும்போது ரத்தக்குழாயில் பாதிப்பு ஏற்படுகிறது. அதிலுள்ள அதிகக் காரமும் ஆரோக்கியத்துக்கு எதிரியே! இந்தச் சுவைக்கு நாக்குப் பழகி விடுவதால் சத்தான உணவுகளை குழந்தைகள் விரும்புவதில்லை. கசப்பு, உவர்ப்பு, புளிப்பு உள்ளிட்ட சுவைகள் குழந்தைகளுக்குப் பிடிக்காமல் போகின்றன.
கீரை, காய்கறிகளைத் தவிர்ப்பதால் உடலுக்குத் தேவையான சத்துகள் கிடைக்காமல் தடுக்கப்படுகிறது. உடல் மட்டுமின்றி மனரீதியான அபாயங்களையும் உருவாக்கும் ஃபாஸ்ட் ஃபுட், குழந்தைகளை ஒரு கட்டத்தில் அடிமைப்படுத்தி விடுகிறது. உறுப்புகளையும் ஹார்மோன்களையும் பாதிக்கிறது. சிந்திக்கும் திறனைக் குறைத்து அறிவுத் தேடலுக்கு தடை போடுகிறது.
அடம் பிடிக்கும் குழந்தைகள் பொறுப்புகளை தட்டிக் கழிக்கும் மனப்பக்குவத்தை அடைகிறார்கள். இந்த உணவுக் கலாசாரம் குழந்தைகளின் நிகழ்காலத்தை மட்டுமின்றி, எதிர்காலத்தையும் கேள்விக் குறியாக்குகிறது. உணவின் உளவியலைப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப வீட்டில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்.
எந்த மாற்றத்தையும் மனதில் இருந்து தொடங்க வேண்டும். குழந்தைகளிடம் எதிர்பார்க்கும் மாற்றத்துக்கு பெற்றோரே ரோல் மாடல்! ஃபாஸ்ட் ஃபுட் விளைவுகளை குழந்தைகளுக்கு மெல்லச் சொல்லி புரிய வைக்கலாம். ஆசிரியர், மருத்துவர், நண்பர்கள் மூலம் குழந்தைகளுக்குப் புரியும்படி சொல்லலாம். சமைக்கத் திட்டமிடும் போது, குழந்தைகளை இணைத்துக் கொள்ளலாம். இன்றைய சமையல் என்ன, எந்த காய் சமையலுக்கு, என்ன பொரியல் என்பதிலும் சுட்டிகளின் விருப்பத்துக்கு மதிப்பளிக்கலாம். வீட்டில் நன்கு சமைத்துச் சாப்பிடும் போது ஃபாஸ்ட் ஃபுட் தேவை குறையும்.
சத்தான தானிய வகைகளில் குழந்தைகளுக்குப் பிடித்த சுவையில் ஸ்நாக்ஸ் செய்து கொடுக்கலாம். சர்க்கரைக்கு பதிலாக பனைவெல்லம் பயன்படுத்தலாம். அது, ரத்தசோகையை கட்டுப்படுத்தி, புத்திக்கூர்மையை அதிகரிக்கும். இயற்கை சார்ந்த உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். இவற்றைச் சாப்பிடுவதால் என்னென்ன சத்துகள் உடலுக்கு கிடைக்கின்றன என்பதைப் புரிய வைக்கலாம். உணவை ரசித்து, சுவைத்து சாப்பிடப் பழக்க வேண்டும்.
நொறுக்குத் தீனி சாப்பிடுவதில் பெண்கள்,
குழந்தைகளுக்கு முதலிடம்!
இரவு உணவுக்கு முந்தைய தேநீர் அருந்தும் காலம் நொறுக்குத் தீனி உண்பவர்களுக்கு மகிழ்ச்சியான தருணம் என்றால் அது மிகையாகாது.பெண்களும், குழந்தைகளும் அதிக அளவில் ஆரோக்கியமில்லாத உணவுப் பண்டங்களை அதிகமாக சாப்பிடுவது தெரிய வந்துள்ளது.
நூடுல்ஸ், சிப்ஸ், பிஸ்தா, பிஸ்கட்டுகள்,பேக்கரிப் பண்டங்கள் ஆகியவற்றை மாலை 5 முதல் 7 மணி வரையிலான நேரத்தில் 88 விழுக்காடு பெண்களாலும்,குழந்தைகளாலும் சாப்பிடப்படுகிறது. சற்று கூடுதலாக தேநீர் அருந்தும் போது, உணவுக்கு முன்னதாக என்று இரண்டு முறை நொறுக்குத் தீனி உட்கொள்வதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
நடுத்தர, மேல்தட்டு வர்கத்தைச் சேர்ந்த 28 முதல் 40 வயதுக்குட்பட்ட வேலைக்குச் செல்லும், வீட்டில் இருக்கும் பெண்களிடமும், 5 முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடமும் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் போது வழக்கமாக உரிய கால இடைவெளியில் அவர்கள் உட்கொள்ளும் உணவு வகைகளுடன், இரவு உணவுக்கு முந்தைய தேநீர் நேரத்தின் போது சாப்பிடும் நொறுக்குத் தீனிகள் குறித்தும் கேட்கப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இரவு உணவுக்கு முந்தைய நேரத்தில் உடல் நலனுக்கு உதவாத பல்வேறு வகையான நொறுக்குத் தீனிகளை மக்கள் அதிக அளவில் சாப்பிடுவது தெரியவந்துள்ளது. மக்கள் சாப்பிடும் நொறுக்குத் தீனிகளில் உடல் நலனுக்கு ஆரோக்கியமானது,ஆரோக்கியமற்றது எது என்பது தொடர்பான இந்த ஆய்வை, நாடு முழுவதும் உள்ள உணவு, ஊட்டச்சத்து நிபுணர்கள் வரவேற்றுள்ளனர்.
உணவுக்கு முந்தைய நொறுக்குத் தீனி உண்ணும் பழக்கம் அண்மைக்கால வாழ்க்கை முறை மாற்றத்தால் உருவானது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். நாம் உட்கொள்ளும் உணவு வகைகளைச் சத்துள்ளதாக மாற்றிக் கொண்டால் போதுமானது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகளின்ஆரோக்கியத்தை நொறுக்கும் நொறுக்குத் தீனி..
நொறுக்குத்தீனிகளில் அதிக சர்க்கரை இருப்பதால், தொடர்ந்து அவற்றை உட்கொண்டுவரும் குழந்தைகள் சோர்வாகவும், தெம்பின்றியும் காணப்படலாம்.பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனேகமானவர்கள் நொறுக்குத் தீனி பிரியர்களாக உள்ளனர். நொறுக்குத் தீனி தனது சுவையால் அவர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறது.
ஆனால் நொறுக்குத் தீனி சாப்பிடும் பழக்கம், நாளடைவில் ஆரோக்கியத்தையே உருக்குலைக்கும். எனவே, பெரியவர்கள் நொறுக்குத் தீனி சாப்பிடாமல் தவிர்ப்பதுடன், குழந்தைகளுக்கும் அப்பழக்கத்தை ஊக்குவிக்காமல் இருப்பது நலம்.
குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைப் பற்றி எடுத்துக்கூறி, அதை பழக்கப்படுத்துவது பெற்றோரின் பொறுப்பு.
நொறுக்குத்தீனிகள் சத்துகள் இல்லாமல் வெறும் சர்க்கரையையும் உப்பையும் கொண்ட வெற்று கலோரிகளை உடலுக்கு அளிக்கின்றன. மாறாக, சரிவிகித உணவுகள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை சரியான அளவில் அளிக்கும்.
நொறுக்குத்தீனிகளில் அதிக சர்க்கரை இருப்பதால், தொடர்ந்து அவற்றை உட்கொண்டுவரும் குழந்தைகள் சோர்வாகவும், தெம்பின்றியும் காணப்படலாம். இதனால், அவர்கள் படிப்பிலும், பிற தினசரி செயல்பாடுகளிலும் கவனம் செலுத்த முடியாமல் போகலாம். நொறுக்குத்தீனியில் உள்ள அதிக கொழுப்பால், உடலில் கொலஸ்டிராலும் டிரைகிளிசரைடும் அதிகரித்து, குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்படலாம்.
நொறுக்குத்தீனிகள் குழந்தைகளைக் கவர ஒரு முக்கியக் காரணம், அவை கவர்ச்சிகரமான தோற்றத்தில், பளபளக்கும் ‘பேக்கிங்’கில் வருவது. பெற்றோர், ஆரோக்கியமான உணவுகளையும் குழந்தைகளை ஈர்க்கும்படி சமைத்துக் கொடுக்கலாம்.
அவை வண்ணமயமாகவும், புதுமைத் தோற்றத்துடனும் இருக்க வேண்டும். உதாரணமாக, காய்கறிகளையும் பழங்களையும் கொண்டு அலங்காரமான ‘சாலட்’ தயாரிக்கலாம். குழந்தைகளுக்கான உணவில், மாவுச்சத்து, கொழுப்பு, புரதம், கால்சியம் போன்ற எல்லா சத்துகளும் சரியான அளவில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
‘ஜங்க் புட்’ எனப்படும் துரித உணவுகள், நொறுக்குத்தீனிகள் சாப்பிடும் பழக்கம் குழந்தைகளுக்கு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு, அவற்றின் தீமைகளை குழந்தைகளுக்கு தெளிவாக விளக்கிக்கூற வேண்டும். பெற்றோர்களே குழந்தைகளுக்கு முன்னுதாரணமாக மாறி, நொறுக்குத்தீனிகள் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
ஆசைக்காக எப்போதாவது கொஞ்சம் நொறுக்குத் தீனியைக் கொறிப்பதில் தவறில்லை. ஆனால் அதை அன்றாட வழக்கமாக்கிக்கொண்டால், குறிப்பாக டி.வி., சினிமா பார்க்கும்போது நம்மையும் அறியாமல் அதிக நொறுக்குத்தீனி சாப்பிட்டால், துன்பத்தை நாமே அழைப்பிதழ் கொடுத்து அழைக்கிறோம் என்றுதான் பொருள்.
தொடர்ச்சியான நொறுக்குத்தீனி பழக்கம், நாளடைவில் ஆரோக்கியத்தை நொறுக்கிவிடும் என்பதை நாம் உணர்ந்து, குழந்தைகளுக்கும் உணர்த்தி வழிநடத்த வேண்டும்.