இந்தோனேசியாவில் பலத்த மழை கொட்டியதால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தொடர்ந்து மீட்புப்பணி நடந்து வருகிறது. பலர் மண்ணுக்குள் புதைந்து உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.இந்தோனேசியாவின் பல பகுதிகளில் கடந்த 2 நாட்களாக விடாமல் பேய் மழை கொட்டி தீர்த்தது.

மேற்கு ஜாவா மாகாணம் சுமேடங் மாவட்டத்தில் உள்ள சிஹான்ஜிவாங் கிராமத்தில் பலத்த மழை கொட்டியதால் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதனையடுத்து மண்ணுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியை மீட்பு படையினர் ஈடுபட்டனர். அப்போது அதே இடத்தில் எதிர்பாராதவிதமாக 2-வது முறையாக நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவால் அங்கு இருந்தவர்கள் மண்ணுக்குள் புதைந்தனர். மீட்புகுழுவினர் உள்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அங்கு தொடர்ந்து மீட்புப்பணி நடந்து வருகிறது. இன்னும் பலர் மண்ணுக்குள் புதைந்து உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது . நிலச்சரிவால் சாலைகள், பாலங்கள் துண்டிக்கப்பட்டுள்ளதால் மீட்பு பணியை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.