சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் மூன்றாம் உலக நாடாக இருந்த சிங்கப்பூர் இன்று பொருளாதார ரீதியாக மாபெரும் சக்தியாக வளர்ந்துள்ளது. சிறிய தீவு நாடாக இருந்தாலும் பல வெளிநாட்டினருக்கு வேலைவாய்ப்புகளை அள்ளி வழங்குகிறது. இதுபோக, சர்வதேச நிதி மையங்களில் முக்கியமானதாகவும் இருக்கிறது. பதற்றம் இல்லாத அமைதியான நாடு. இதெல்லாம் எப்படி சாத்தியமானது?
சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ தலைமையிலான அரசு ஏற்படுத்திய கொள்கைகள் நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட்டது. அவரது ஆட்சிக்காலத்தில் ஏராளமானோர் வறுமையில் இருந்து வெளியேறினர். தொழில் வளர்ச்சி அட்டகாசமாக வளர்ச்சி பெற்றது.
தொழில்
சிங்கப்பூரின் வளர்ச்சியில் தொழிலுக்கு மிக அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. தொழில் செய்ய விரும்புவோருக்கு எல்லா வசதிகளையும் செய்துகொடுத்து எளிமைப்படுத்தி தந்தது சிங்கப்பூர் அரசு. இதனால் வேலைவாய்ப்புகளும் பெருகின.
2.கடுமையான சட்டங்கள்
சிங்கப்பூர் மிக கடுமையான சட்டங்களுக்கு பெயர் பெற்றது. பொது இடங்களில் எச்சில் துப்பக்கூடாது என்பதில் தொடங்கி சுவிங் கம் வரை தடை செய்யப்பட்டது. இதன் விளைவாக சிங்கப்பூர் தூய்மையான நகரமாக உருவெடுத்தது. சுற்றுலா துறை வளர்ச்சி பெற்றது.
3.தகுதி
தகுதியான நபர்களுக்கு தகுதியான வேலைவாய்ப்புகள் என்பது குறித்து முன்னாள் பிரதமர் லீ குவான் யூ அடிக்கடி வலியுறுத்தி வந்தார். நண்பர்கள், குடும்பம், உறவினர் என்ற அடிப்படையில் பொறுப்புகளை வழங்குவதை அவர் வலியுறுத்தவில்லை. சிங்கப்பூரின் வெற்றிக்கு இதுவும் முக்கிய காரணம் என்கிறார்.
4.ஊழலற்ற நிர்வாகம்
லஞ்சம், ஊழல் இல்லா நிர்வாகம்/நாடு என்பதற்கு சிங்கப்பூர் ஒரு சிறந்த உதாரணம். அந்நாட்டின் வளர்ச்சிக்கு ஊழலற்ற நிர்வாகமும் முக்கிய காரணியாக கூறப்படுகிறது.
5.மத நல்லிணக்கம்
சிங்கப்பூரில் பலதரப்பட்ட நாடுகளை சேர்ந்த மக்களும், சமூகங்களும் வசிக்கின்றனர். பல்வேறு மத நம்பிக்கைகளை கொண்ட மக்கள் அமைதியாக கூடி வாழ்கின்றனர். எனவே, சிங்கப்பூர் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது.
6.கல்வி
சிங்கப்பூரின் கல்வி அமைப்பு உலகளவில் சிறந்த தரத்திலானது என அனைவராலும் பாராட்டப்படுகிறது. வளமையான சமூகம் அமைய கல்வி மிக முக்கியம் என்பதால் லீ குவான் காலத்திலேயே கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.